Tamil News | Pudhiyaboomi News

கொங்கு வேளாளர் வரலாறு

 
 
கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

சமுதாய அமைப்பு

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை

கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.
கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணி--யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.
கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். இது ஒரு பதச் சான்றாய்வே (Sample Study) ஆகும். பிற தமிழ்க்குடிகள் பற்-றிய ஆய்வுகள் இது போன்று மேலும் சான்ற-ளிக்கக் கூடும்.

குலதெய்வம்

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ - அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதேய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணகுவதுடன் தனது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.

திருமண முறை

பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.

என்று அப்பாடல் தொடங்கும். கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும்.

முதல் நாள்

நாள் விருந்து இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள்

கலியாண நாள் அல்லது முகூர்த்த கால். இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும் ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

கங்கணம் கட்டுதல்

அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.

நிறைநாழி செய்தல்

வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

இணைச்சீர்

இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். பின் இருவருக்கும் அருகு மணம் செய்து வைத்து இருவரையும் திருமண வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள்

முகூர்த்தம் இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.

குலம் அல்லது கூட்டம் பட்டியல்

கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளது. ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது.




கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்து
கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடியது
 
காப்பு வெண்பா
 
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்

அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய

தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்

நம்பிக்கை உண்டே நமக்கு. 

அகவல்பா 
 
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்

திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்

கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்

சந்திர சூரியர் தானவர் வானவர்

முந்திய தேவர் மூவருங் காத்திட

நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்

தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!

சீரிய தினைமா தேனுடன் கனிமா

பாரிய கதலிப் பழமுடன் இளநீர்

சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்           10

மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்கு
எள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன்
பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து
ஆரமுது அருந்தும் அழகு சிறந்த
பேழை வயிற்றுப் பெருமதக் களிறே
அடியேன் சொல்லை அவனியில் குறித்துக்
கடுகியே வந்தென் கருத்தினில் நின்று
நினைத்த தெல்லாம் நீயே முடித்து
மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!           20
மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத
என்குரு நாதன் இணையடி போற்றி
கிரேதா திரேதா துவாபர கலியுகம்
செம்பொன் மகுடம் சேரன் சோழன்
பைம்பொன் மாமுடிப் பாண்டியன் என்னும்
மூன்று மன்னர் நாட்டை ஆள்கையில்
கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்
சிறந்த மானிடம் தாயது கருப்பம்
வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம்
இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்           30
பக்குவம் ஆகிப் பருவங் கொண்டு
திக்கில் உள்ளோர் சிலருங் கூடி
வேதியன் பக்கமே விரைவுடன் சென்று
சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டு
இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
இருவர் பேரையும் இராசியில் கேட்டுக்
கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம்
ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்
தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
வாசல் கௌலி வலிதென நிமித்தம்           40
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்
பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து
சிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டு
வெண்கல முரசம் வீதியில் கொட்டத்
தங்க நகரி தானலங் கரித்து
முற்றமும் மனையும் முத்துகள் பரப்பிச்
சித்திரக் கூடம் சிறக்க விளக்கி
உரியவர் வந்தார் உன்மகளுக் கென்று           50
பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
நாளது குறித்து நல்விருந்து உண்டு
பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே
கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்
தேம்பனை யோலை சிறக்கவே வாரித்
திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக்
கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார்
பாங்குடன் முகூர்த்தப் பாலக்கால் நாட்டித்
தென்னம் குலையும் தேமாங் கொத்தும்           60
பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி
வாழை கமுகு வளர்கூந் தற்பனை
மாவிலைத் தோரணம் மகரத் தோரணம்
சோலை இலையால் தோரணங் கட்டி
மூத்தோர் வந்து மொழுகி வழித்துப்
பார்க்குமிடம் எங்கும் பால்தனைத் தெளித்துப்
பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்
கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி
நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
பாரிய வெல்லம் பாக்கு வெள்ளிலை           70
சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
வாரியே வைத்து வரிசை குறையாமல்
முறைமை யதாக முக்காலி மேல்வைத்து
மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்
அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கி
எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து
ஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை           80
மேள முடனே விளாவியே வார்த்துச்
செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து
வண்ணப் பட்டுடை வத்திரந் தன்னை
நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி
மன்னவர் முன்னே வந்தவ ருடனே
வாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச்
சாணங் கொண்டு தரைதனை மெழுகிக்
கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டி
அருகது சூடி அருள்பொழிந் திடவே
நிரம்பி யதாக நிறைநாழி வைத்து           90
வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்து
அலைகடல் அமுதம் அவனியின் நீரும்
குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து
முளரி மெச்சிட முகமது விளங்கிடக்
களரி வைத்துக் காப்பது கட்டிக்
குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்துச்
செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்து
சாந்து புனுகு சவ்வாது பன்னீரும்
சேர்த்துச் சந்தனம் சிறக்கவே பூசிக்
கொத்தரளி கொடியரளி கோத்தெடுத்த நல்லரளி           100
முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ
நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும்
வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும்
மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்
புன்னை கொன்னை பூக்கள் எல்லாம்
கொண்டு வந்து கொண்டை மாலை
தண்டை மாலை சோபனச் சுடர்மாலை
ஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்து
திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து
நட்டுமெட்டுத் தான்முழங்க நாட்டார்தன் நாட்டுக்கல்லை           110
நன்றாய் வலம்வந்து நலமாக நிற்கையிலே
செஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித்
திட்டி கழித்துச் சிவசூரி யனைத்தொழுது
அட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்து
மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி
இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச்
மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு
ஆடை ஆபரணம் அழகுறத் தான்பூண்டு
கூறை மடித்துவைத்துக் குணமுள்ள மங்கையவள்
பேழைமூடி தான்சுமந்து பிறந்தவனைச் சுற்றிவந்து           120
பேழைதனை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி
கூறைச்சேலைத் தலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து
மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து
அருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையை
அரிசியில் பதியம்வைத்து ஐங்கரனைப் பூசித்து
மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்
செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்
வேழ முகத்து விநாயகர் தாள்பணிந்து
சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு           130
அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்
முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப்
பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கி
இந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்பு
தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப்
பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்று
மாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப்
போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித்
தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்
போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப்           140
பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்
தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்
தமையன் ஆனவர் யானையின் மேல்வர
நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்
தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்
பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்
பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத
எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்
கைத்தாளம் பம்பை கனதப்புத் தான்முழங்கச்           150
சேகண்டி திமிர்தாளம் சிறுதவண்டை ஓசையெழத்
துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர
உருமேளம் பறைமேளம் உரம்பை திடும்படிக்கப்
பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்
பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர
வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்
சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க
இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்
குதிரை மீதிவர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை           160
சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்
கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர
நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்
பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட
மேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்க
அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப்
பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்து
மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து
எதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்க
உடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப்           170
பந்து சனங்கள் பண்புமித் திரர்வர
வந்தனை ஆன வாத்தியம் ஒலிக்கப்
பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டி
திட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவர
அரம்பை மேனகை அணிமிகும் திலோத்தமை
திறம்பெறும் ஊர்வசித் தெரிவையர்க்கு ஒப்பாய்
வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று
நன்மைசேர் பரத நாட்டியம் ஆடிட
வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி
வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும்என்றார்           180
நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்
பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிக்கு
நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்
பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று
அட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
அருமைப் பெரியவரும் அன்ன நடையாரும்           190
பெருகும் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று
இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்
சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்
கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்
கண்டுமனம் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்
நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்
பூட்டுமென்றார் தோடெடுத்துப் பொன்னவளின் திருக்காதில்
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
ஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச்
சாந்துப் பொட்டிட்டுச் சவ்வாது மிகப்பூசி           200
ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை
பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்
தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்து
சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப்
பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப்
பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
ஆரணங்குப் பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
வலமதாய் வந்து நலமதாய் நின்று           210
செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து
நிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்து
அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து
மங்கள கலியாண மணவறையை அலங்கரித்து
அத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு
பஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கி
மாந்துளிர்சேர் பூங்கொத்து வண்ணமுள்ள பட்டாடை
மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டிஉள்ள
அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்
பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச்           220
சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
செம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே
வீர இலக்குமி விளங்கிடும் வாசலிலே
விருதுகள் வழங்கிடும் விருப்பமுள்ள வாசலிலே
தரணியில் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே
பன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே
நாட்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்
பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச்
சாலுங் கரகமும் சந்திர சூரியரும்
அம்மி வலமாக அரசாணி முன்பாக           230
ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்
சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்
பத்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்
மணவறை அலங்கரித்து மணவாளனை அங்கிருத்தி
அழகுள்ள மணப்பெண்ணை அலங்காரம் பலசெய்து
மாமன் எடுத்து மணவறை சுற்றிவந்து
மகிழ்ச்சியது மீதூற வலதுபுறம் தானிருத்திக்
குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க
இராமன் இவரோ! இலக்குமணன் இவரோ!
கண்ணன், இந்திரன், காமன் இவர்தானோ!           240
கார்முகில் இவரோ! காங்கேயன் இவர்தானோ!
என்றே பாரிலுள்ளார் ஏத்திப் பாராட்ட
அத்தை மகள்தனை அழகுச் செல்வியை
முத்து இரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக்
கணபதி முன்பாகக் கட்டும்மங் கிலியம்வைத்து
அருமைப் பெரியவர் அன்புடன் வழிபட்டு
மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்
கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று கொட்டியார்ப்ப
மாணிக்க மாங்கல்ய வைடூர்யத் திருப்பூட்டி
மாலைதனை மாற்றி மணவறையில் அமர்ந்தபின்னே           250
மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்
கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச்
சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே
கங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரைத்து
மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி
மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்
பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து
அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர்
கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத்
தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து           260
உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலே
தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து
செங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும்
மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று
சாப்பாடு போசனம் சந்தோச மாய்ப்போட
உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்
கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார்
மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்து
கலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து           270
கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்
அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து
பணமது பார்த்துக் குணமது ஏற்றுக்
கல்லு வராகன் கருவூர்ப் பணமும்
வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
சம்மன் கட்டி சாத்தூர் தேவன்
உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
ஒருவிழி விழிக்க ஒருவிழி பிதுங்கப்
பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து           280
முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்
பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்
பந்தல் பல்லி பாக்கியம் உரைக்க
மச்சினன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச்
சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச்
சந்தோ சமாகித் தங்கமுடி மன்னவர்கள்
பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்பட
நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே
தனிப்பணம் தான்கொடுத்துத் தங்கிஇரும் என்றார்           290
வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத்
திடமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு
அரிசி அளந்தார்கள் அனைவோரும் தானறிய
கரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும்
புடவைதனைக் கொடுத்துப் பொற்பாய்த் தலைமுழுகிச்
சட்டுவச் சாதம் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்கு
இல்லத்தாள் பரிமாறி இனிதுண்டு இளைப்பாறிப்
பண்ணை மாதிகனைப் பண்பாகத் தானழைத்து
வில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்பு
காலும் விளங்கக் கன்னியைத் தானழைத்து           300
மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்து
மாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்து
மங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன்
மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
பஞ்சவண்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டாடை
அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
இந்திர வண்ணப்பட்டு ஏகாந்த நீலவண்ணம்
முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை           310
கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்
வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்
காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்
நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!
எல்லாச் சீரும் இயல்புடன் கொடுத்து
அடைவுடன் வரிசைபெற்ற அழகு மணவாளன்
மக்கள்பதி னாறும்பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க!
வாழி மணமக்கள் வந்தவர்கள் வாழ்த்துரைக்க!
ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி,
மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க!           321
 
வாழ்த்துரை
 
ஆதி கணேசன் அன்புடன் வாழி!
      வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
      எம்பெரு மானின் இணையடி வாழி!
      மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
      திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
      முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி
      நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
      வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
      பாரத தேசம் பண்புடன் வாழி!
      கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
      காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
      வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
      மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
      வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
      என்குரு கம்பர் இணையடி வாழி!
      வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
      வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
      இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே! 


 மங்களவாழ்த்து .... இலவச பதிவிறக்கம் செய்ய ...

1 comment:

Unknown said...

மிக அருமையான பதிவு...