Tamil News | Pudhiyaboomi News

Saturday 12 October 2013

சதாசிவ பிரமேந்திரர்

சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம். பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே! பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார். ""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது. ""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். பல ஊர்களில் சுற்றித்திரிந்தார். ஒருநாள் ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் காவிரி நதியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் வர, மணல் அதிகமாக அடித்து வரப்பட்டு அவரை மூடிவிட்டது. வெள்ளம் வற்றியதும், மணலைத் தோண்டிப் பார்த்தால், தலையில் மண்வெட்டி காயத்துடன் ரத்தம் வழிய அவர் தன் வழியில் சென்றார். ஒருமுறை இவர் குறுநிலமன்னன் ஒருவனது அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டார். நிர்வாணநிலையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததால் கோபமடைந்த மன்னன், அவரது கையை வெட்டிவிட்டான். வெட்டுப்பட்டது கூட தெரியாமல் அவர் தன்போக்கில் நடந்தார். வியப்படைந்த மன்னன், அவரிடம் மன்னிப்பு கேட்ட போது தான் கை போனதே அவருக்கு தெரிய வந்தத. பிறகு வெட்டுப்பட்ட தன் கையுடன் நடந்து சென்ற போது, ஆச்சரியப்பட்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டான். உணர்வு நிலைக்கு திரும்பிய பிரம்மேந்திரர், துண்டான கையை ஒட்ட வைத்துக் கொண்டார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு.