வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உயர்த்திய பின்னும், "கவுண்டர்' என்ற பெயரில் சமூகத்தில் வன்னியர்கள், வலம் வருகின்றனர். இவர்கள் அரசியல் ரீதியாக தங்களை வன்னியர் என காட்டிக்கொண்டாலும், சமூக ரீதியாக, "கவுண்டர்' என காட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில், வடமாவட்டங்களில் வன்னியர்களுக்கு என ஓட்டு வங்கி உள்ளது. வன்னியர்கள், பிற சமூகத்தினர் மத்தியில் பழகுவதை தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக்கொள்வர். தமிழகத்தின் மூவேந்தர்களின் ஆட்சிக்கு பின், வன்னியர்களை, "வன்னியக் கவுண்டர்' என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கால மாற்றத்தின் காரணமாக, பெருந்தாளி கவுண்டர், சிறுதாளி கவுண்டர் என, கிராமங்களில் நடைமுறைக்கு ஏற்ப அழைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழும் கவுண்டர்கள் மட்டுமே இன்றளவும், "நாட்டுக் கவுண்டர்' என அழைக்கப்படுகின்றனர். சேலம் மாவட்டத்தின் சங்ககிரி துவங்கி, கோவை மாவட்டம் வரை, அதிக அளவில் கொங்கு வேளாள கவுண்டர்களே உள்ளனர்.
வன்னியர்களை பொறுத்தவரை படையாச்சி கவுண்டர், வர்மா, நாயக்கர் உட்பட, 102 வகையினர் உள்ளனர். இவர்களை பொதுவாக, "வன்னியர் குல சத்ரியர்' என, அழைப்பர். அரசால் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ்களில், "வன்னியர் குல சத்ரியர்' என, வன்னியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் வறுமை காரணமாக, சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு. தற்போது, நாகரிக வளர்ச்சியின் காரணமாக, சமூகத்தில் தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
பலர் அரசியல் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் மேம்படுத்திக்கொண்டனர். இன்று அரசு பதவிகளிலும் சரி, வர்த்தக, தொழில் ரீதியாவும், அரசியலிலும் வலம் வருகின்றனர். சமூகத்தில் தங்களை மேம்படுத்தப்பட்டவர்களாக உயர்த்திக் கொண்டாலும், இன்றளவும் அவர்கள் வம்புக்கும் (சண்டைக்கும்), அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடம் உள்ளது. அதன் காரணமாக வன்னியர்கள் என்றால், அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை, எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர். சமூகத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்துள்ள வன்னியர்கள் பலர், தொழில் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தங்களை, "கவுண்டர்' என சமூகத்தில் அறிமுகம் செய்து கொண்டு வலம் வருகின்றனர்.
இந்த கலாசாரம் கடந்த ஐந்தாண்டுகளாக வேகமாக பரவி வருகிறது. அது மட்டுமல்ல, அரசியில் ரீதியா வளர்ச்சி கண்டுள்ள பலர், தங்களை, "வன்னியர்' என அரசியலுக்காக வெளியில் கூறினாலும், தங்கள் சமூகத்தினர் மத்தியில், "கவுண்டர்' என அடையாளம் காட்டுவதை தான் பெருமையாக கருதுகின்றனர். "கவுண்டர்' என வலம் வரும் பலர், தற்போது தங்களை, "கொங்கு வேளாள கவுண்டர்' என, மாற்றிக் கொள்ளவும் துவங்கி விட்டனர். "கவுண்டர்' என கூறிக் கொள்ளும் இவர்கள், தங்களை, "வன்னியர் கவுண்டர்' என அறிமுகம் செய்ய தயங்குகின்றனர். இந்த மாற்றம், சமூகத்தில் தங்கள் மீதான தவறான எண்ணங்களை முற்றிலும் மாற்றவே என, அவர்கள் தெரிவித்தாலும், இது வன்னியர் மற்றும் கவுண்டர் சமூகத்தில் சற்று சலசலப்பையே ஏற்படுத்தி உள்ளது.
வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் வடமாவட்டங்களில் வாழும் வன்னியர்களில், 102 உட்பிரிவுகள் உள்ளன. இதில் மாவட்டத்துக்கும், ஊர்களின் உள்ள நடைமுறைக்கு ஏற்ப, பல்வேறு பெயர்கள் உள்ளன. அதில், "கவுண்டர்' என ஒரு பிரிவும் உள்ளது. அந்த பிரிவினரே தங்களை, "கவுண்டர்' என கூறிக் கொள்கின்றனர். பிற வன்னியர்களின் உட்பிரிவினர் தங்களை அவ்வாறு மாற்றம் செய்து கொள்வது இல்லை. உண்மையான வன்னியன், அந்த மாற்றத்தை விரும்பவும் மாட்டான் என்றார்.